லண்டன்: லண்டனில் நடந்த வாள்வீச்சுத் தாக்குதலில் உயிரிழந்த 14 வயது சிறுவனின் விவரங்களை வெளியிட்ட பிரிட்டிஷ் காவல்துறையினர், சந்தேக நபர் மீது கொலைக் குற்றச்சாட்டுடன் மற்ற குற்றச்சாட்டுகளும் சாட்டப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
பிரிட்டன் தலைநகரில் கிழக்கே ஹைனால்ட் பகுதியில் பள்ளியை நோக்கி நடந்து சென்ற டேனியல் அன்ஜோரின் என்பவர், சமுராய்-வகை வாள் போன்ற ஒன்றை வைத்திருந்த ஆடவரால் தாக்கப்பட்டதை அடுத்து ஏப்ரல் 30ஆம் தேதி உயிரிழந்தார்.
காவல்துறையினர் அந்த 36 வயது சந்தேக நபரை ‘டேசர்’ துப்பாக்கியால் சுட்ட பிறகு கைது செய்தனர்.
ஸ்பானிய-பிரேசிலிய நாட்டவரான அந்தச் சந்தேக நபரின் பெயர் மார்கஸ் ஒரேலியோ ஆர்டுயினி மோன்ஸோ என்றும் மே 2ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் முன்னிலை ஆவார் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
இதற்கிடையே, உயிரிழந்த மாணவர் அன்ஜோரின் தமது படிப்பில் பாராட்டுதலுக்குரிய அர்ப்பணிப்பைக் காட்டியவர் என்று அவரது பள்ளி கூறியுள்ளது.
சந்தேக நபர் இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்குக் கடுமையான காயம் விளைவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிகாரிகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டதை அடுத்து தொடர்ந்து மருத்துவமனையில் உள்ளனர்.