ராபுபுரா: பரம எதிரிகளான இந்தியாவையும் பாகிஸ்தானையும் சேர்ந்த ஒரு காதல் ஜோடி, எதிர்ப்புகளை மீறி எல்லைகடந்து ஒன்றுசேர்ந்து வாழ்கின்றனர். இரு நாட்டுக்கும் இடையிலான பகையையும் மதச்சார்பு பிரச்சினைகள் பற்றிய அச்சத்தையும் தங்கள் காதல் வெற்றி கொண்டதாக இருவரும் கூறுகின்றனர்.
திருமணமாகாத இந்தியரான 22 வயது சச்சின் மீனா ஒரு கடையில் வேலை செய்கிறார். இவர் ஓர் இந்து. திருமணமாகி நான்கு பிள்ளைகளுக்குத் தாயான 27 வயது முஸ்லிம் பெண் சீமா ஹைதரும் சச்சினும் 2020 கொவிட் பரவலின்போது PUBG எனும் இணைய விளையாட்டை விளையாடுகையில் இணையம்வழி சந்தித்தனர்.
“நாங்கள் நண்பர்களானோம். எங்கள் நட்பு காதலாக மாறியது, - ஒவ்வொரு நாளும் காலையிலும் இரவிலும் பேசினோம், முடிவில் சந்திக்கத் தீர்மானித்தோம்,” என்று ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் சீமா கூறினார். அவர் தற்போது திரு சச்சினின் குடும்ப வீட்டில் அவருடன் சேர்ந்து வாழ்கிறார்.
மே மாதம், கணவரை விட்டுவிட்டு, நான்கு பிள்ளைகளுடன் நேப்பாளத்தின் வாயிலாக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குக் கள்ளத்தனமாக வந்தார் சீமா. இருவரும் உள்ளூர் நீதிமன்றத்தில் திருமணம் செய்துகொள்ள முயன்றபோது கைது செய்யப்பட்டு, சென்ற வாரம் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அதன்பிறகு திரு சச்சினை சீமா திருமணம் செய்துகொண்டார்.
“நான் இந்து மதத்திற்கு மாறிவிட்டேன். திரும்பிச் செல்வதை அல்லது சச்சினை விட்டுப்பிரிவதைவிட செத்துவிடுவேன்,” என்று ராபுபுரா கிராமத்தில் சச்சினுக்குப் பக்கத்தில் அமர்ந்தபடி சீமா கூறினார்.
சீமா நீண்டகாலம் தங்குவது சாத்தியமில்லை என்று இந்தியக் காவல்துறையினர் கூறினர். ஆனால் சீமா தனக்குக் குடியுரிமை வழங்குமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.
சீமாவும் சச்சினும் மார்ச் மாதம் நேப்பாளத்தில் முதல்முறையாகச் சந்தித்தனர். அந்தச் சந்திப்புக்குப் பிறகு, “கொடுமைக்கார” பாகிஸ்தானியக் கணவரை விட்டுப்பிரிய சீமா முடிவெடுத்தார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை சீமாவின் கணவர் மறுக்கிறார்.
இருவரும் யூடியூப் காணொளிகளைப் பார்த்து பல மாதங்களாகத் திட்டமிட்டு நேப்பாளத்தின் வாயிலாக இந்தியாவுக்கு வந்தனர்.
சச்சினின் குடும்பத்தார் ஆரம்பத்தில் எதிர்த்தபோதும், பின்னர் இருவரையும் ஏற்றுக்கொண்டனர்.
சீமாவின் கணவர் குலாம் ஹைதர், தனது குடும்பம் தனக்குத் திரும்ப வேண்டும் என்கிறார். சீமாவும் தானும் வெவ்வேறு பலூச் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்றும், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி ஓடிப்போய் காதல் திருமணம் செய்துகொண்டதாக அவர் கூறினார்.
பின்னர், ஊர்ப் பெரியவர்கள் கூடிப்பேசி ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதித்ததாகவும் அவர் சொன்னார்.
இந்தக் காதல் ஜோடிக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால், சீமாவின் கிராமத்தில் இந்தச் செய்தி வரவேற்கப்படவில்லை.
சச்சினுடன் வாழ்வதில் உறுதியாக இருக்கும் சீமா, “என் பிள்ளைகளுக்கு எல்லா அன்பும் கவனிப்பும் இங்கே கிடைக்கும்,” என்று கூறினார்.