சோல்: சோல் அரசாங்கம் 2025ஆம் ஆண்டு முதல், சொந்த வீடுகள் இல்லாத கைக்குழந்தைகளைக் கொண்ட தம்பதியருக்கு வீடமைப்பு நிதியுதவி வழங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது.
நகரில் வீடமைப்புச் செலவுகள் அதிகமாக இருப்பதால் தம்பதிகள் பிள்ளை பெற்றுக்கொள்வதைத் தவிர்க்கும் போக்கைத் தணிக்கவும், கைக்குழந்தைகளைக் கொண்டுள்ள அதிகமான திருமணமான தம்பதியர் தொடர்ந்து சோலில் வசிக்கவும் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது.
பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அதிகபட்சமாக ஈராண்டுகளுக்கு மாதத்திற்கு 300,000 வோன் நிதியுதவி வழங்குவதற்கான திட்டத்தை சோல் அரசாங்கம் அறிவித்தது. அதன்படி, திருமணமான தம்பதியர், பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அதிகபட்சமாக 7.2 மில்லியன் வோன் வரை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
குழந்தையும் பெற்றோரில் ஒருவரும் கொரியக் குடியுரிமை கொண்டிருந்தால், பலகலாசாரக் குடும்பங்களும் இந்த நிதியுதவிக்குத் தகுதிபெறலாம்.
நிதியுதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தம்பதியர் குறிப்பிட்ட வருமான அளவைக் கொண்டிருக்க வேண்டும் என்ற விதிமுறை இல்லை. இருப்பினும், அவர்கள் சோலில் வசிக்கவேண்டும்; மாதாந்தர வாடகை 2.68 மில்லியன் வோன் அல்லது அதற்கும் குறைவாக இருக்கவேண்டும்.
‘சோல் வீடமைப்பு, சமூகங்கள் நிறுவனம்’, ‘கொரிய நில, வீடமைப்பு நிறுவனம்’ ஆகியவற்றின் பொது வாடகை வீடுகளில் வசிக்கும் தம்பதியர் நிதியுதவிக்குத் தகுதிபெறமாட்டார்கள்.