லண்டன்: லண்டன் நகரத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டைக் காணச் சென்ற அதன் உரிமையாளருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.
வாடகைக்கு குடியிருந்தவர்கள் காலி செய்த சில வாரங்களுக்குப் பிறகு அதன் உரிமையாளர் அந்த வீட்டைக் காணச் சென்றார்.
அந்தக் குடியிருப்பு முழுவதும் புறாக்களின் எச்சத்தால் மூடப்பட்டிருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இரு படுக்கையறைகள் கொண்ட அந்த வீடு முழுவதும் புறாக்களின் எச்சத்தால் சூழப்பட்டிருந்தது.
இதனால் அந்த வீட்டின் சமையலறையும் வரவேற்பறையும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து, வீட்டைத் தூய்மைப்படுத்த அதன் உரிமையாளர், பூச்சிக்கொல்லி நிறுவனம் ஒன்றை அணுகினார்.
அந்தக் குடியிருப்பை சுத்தம் செய்ய £15,000 (S$26,000) செலவாகும் என்றும் அந்தப் பணியை முடிக்க கிட்டத்தட்ட ஒரு மாதம் தேவைப்படும் என்றும் அந்நிறுவனம் சொன்னது.
புறாக்களின் எச்சம் வலுவான எஃகுப் பாலங்களைக்கூட அரிக்கும் தன்மை கொண்டது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.