அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப், டுவிட்டர், பேஸ்புக் மற்றும் கூகல் நிறுவனங்களின் மீதும் அவற்றின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மீதும் நீதிமன்ற வழக்குகளைத் தொடுத்துள்ளார். அமெரிக்காவின் தேசியவாத கருத்துகளின் சுதந்திர வெளிப்பாட்டுக்கு இந்நிறுவனங்கள் சட்டவிரோதமாக குறுக்கே நிற்பதாக திரு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
சமூக ஊடகங்களில் மிகப் பிரபலமாக விளங்கிய திரு டிரம்ப், வன்முறையை விளைவிக்கக்கூடிய கருத்துகள் மற்றும் பொய்யான தகவல்களை அடிக்கடி பரப்பியதாகக் கூறும் குற்றச்சாட்டுகளால் அங்கு அவரது செயல்பாடுகள் முடக்கப்பட்டன. கடந்த அதிபர் தேர்தலில் திரு டிரம்ப் தோல்வி அடைந்ததை ஏற்க மறுக்கும் அவரது ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தின் மீது தாக்குதலை நடத்தியதற்கு திரு டிரம்ப் சமூக ஊடகங்களில் பேசிய விதம் முக்கிய பங்கு அளித்ததாகக் கூறப்படுகிறது. தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும் உண்மையில் தாம் தேர்தலில் வென்றிருப்பதாகவும் திரு டிரம்ப் எந்த முகாந்தரமுமின்றி கூறினார்.
திரு டிரம்பின் முடிவு குறித்து சமூக ஊடக நிறுவனங்கள் இதுவரை எந்தக் கருத்தும் கூற மறுத்துள்ளன.