ஜோகூர்பாரு: சிங்கப்பூரும் மலேசியாவும் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லாத தரைவழிப் பயணத்தட திட்ட (விடிஎல்) விரிவாக்கத்திற்கு இணக்கம் கண்டுள்ளன. அதன்படி டிசம்பர் 20ஆம் தேதி முதல் சிங்கப்பூரர்கள் மலேசியாவுக்கும் மலேசியர்கள் சிங்கப்பூருக்கும் பயணம் மேற்கொள்ளத் தொடங்குவர்.
இந்நிலையில் சிங்கப்பூரர்களின் ஜோகூர் பயணத்தால், கொரோனாவால் முடங்கிக் கிடக்கும் அம்மாநிலத்தின் பொருளியல் மீட்சியடையும் என்று அங்குள்ள வர்த்தகம், சுற்றுலாத்துறைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரர்கள் வருகையால் ஜோகூரில் உள்ள வர்த்தகங்கள் சூடுபிடிக்கத் தொடங்கும் என ஜோகூர் இந்திய முஸ்லிம் தொழில்முனைவோர் சங்கத்தின் செயலாளர் உசேன் இப்ராகிம் தெரிவித்துள்ளார். ஜோகூரில் 70 விழுக்காடு அறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜோகூர் சுற்றுலாத்துறை இயக்குநர் சுஹைரி ஹாஷிம் தெரிவித்தார்.
விடிஎல் திட்டத்தால் ஜோகூர் பாரு, கோத்தா திங்கி, மெர்சிங், பொந்தியானில் உள்ள குக்குப் ஆகிய சுற்றுலாத்தலங்களுக்கு சிங்கப்பூரர்கள் அதிகமானோர் வருகை தருவர் என்று திரு சுஹைரி கூறினார். ஜோகூர் இந்தியர் சில்லறை மற்றும் சிறு வர்த்தகர்கள் சங்கத் தலைவர் டி.ரவிந்திரன், சிங்கப்பூரர்கள் வருகையால் கடைகளில் விற்பனை அதிகரிக்கும் என்று நம்புவதாகக் கூறினார்.