பெருந்தொற்றுச் சூழலில் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அலுவலகத்தில் ஒன்றுகூடல்கள் நடைபெற்றதைக் குறித்து லண்டன் காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து டவுனிங் ஸ்திரீட்டிலும் வைட்ஹாலிலும் கொவிட்-19 கட்டுப்பாடுகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற தகவலை காவல் துறை விசாரித்து வருகிறது.
லண்டன் காவல் துறை ஆணையர் கிரெசிடா டிக் அத்தகவலைத் தெரிவித்தார்.
அந்தத் தகவல்கள் குறித்து ஏற்கெனவே நடைபெற்று வரும் பொதுத் துறை விசாரணையில் கிடைத்த தகவல்களின் பேரில், காவல் துறை தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
டவுனிங் ஸ்த்ரீட்டில் பிரிட்டிஷ் பிரதமரின் இல்லமும் அலுவலகமும் அதன் அருகே உள்ள வைட்ஹாலில் பிரிட்டிஷ் அமைச்சரவை அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசாங்க அலுவலகங்களும் அமைந்துள்ளன.
பொது முடக்கத்தின்போது அங்கு அரசாங்க அதிகாரிகள் கிறிஸ்துமஸ் போன்ற நிகழ்வுகளின்போது ஒன்றுகூடல்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் பிரிட்டனில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் திரு ஜான்சனின் பிறந்தநாள் ஒன்றுகூடல் அவரது அலுவலகத்தில் நடந்ததாக பிரதமர் அலுவலகம் திங்கள் அன்று ஒப்புக்கொண்டது. அதில் 30 பேர் வரை ஒன்றுகூடியிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அந்த சமயத்தில் பிரிட்டனில் முதல் பொதுமுடக்கம் நடப்பில் இருந்தது. வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றின் உள்ளே ஒன்றுகூடல்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த புதிய தகவலால் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் நெருக்கடி அதிகரித்துள்ளது.
காவல் துறை விசாரணையை அடுத்து திரு ஜான்சன் பதவி விலக வேண்டும் என்று எதிர்தரப்பு தொழிலாளர் கட்சி மீண்டும் கூறியுள்ளது.