சிட்னி: பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியா தற்போது கடுமையான விலைவாசி உயர்வைச் சந்தித்து வருகிறது. அங்கு காபி, நூடல்ஸ், வேகவைத்து பதப்படுத்தப்பட்ட பீன்ஸ் போன்றவற்றின் விலைகள் அதிகரித்து வருவதால், மத்திய அரசும் மத்திய வங்கியும் தலையிட வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
உக்ரேன்-ரஷ்யா போர் காரணமாக அதிகரித்து வரும் எண்ணெய் விலை, விநியோகச் சங்கிலி பிரச்சினைகள் என நாடு முழுவதும் விலைவாசி ஏற்றம் கண்டுள்ளது.
போதாதற்கு மேற்கு ஆஸ்திரேலியாவில் பெய்த கனமழை காரணமாக உணவுப் பொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடையும் விலையேற்றத்தைத் தவிர்க்க முடியாததாக்கிவிட்டது.
ஆஸ்திரேலியாவின் தற்போதைய பணவீக்கம் 3.5விழுக்காடாக உள்ளது. இது, 2009ல் ஏற்பட்ட அனைத்துலக நிதி நெருக்கடிக்குப் பிறகு ஆக அதிகமாகும்.
ஆஸ்திரேலிய மத்திய வங்கித் தலைவர் டாக்டர் பிலிப், பணவீக்கம் 4.5 விழுக்காடாக உயரக்கூடும் என்று கூறியுள்ளார். பணவீக்கம் 6 விழுக்காடு வரைகூட செல்லக்கூடும் என்று நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.
இவ்வாண்டில் உணவுப் பொருள்களின் விலை 6.8 விழுக்காடு உயர்வு காணக்கூடும் என கருத்தாய்வு ஒன்று கூறுகிறது.
வரும் மே மாதம் ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த விலையேற்றம் மோரிசனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.