பெய்ஜிங்: சீனப் புத்தாண்டுக்காக ஊர்திரும்பும் மாபெரும் மக்கள் கூட்டம் கொவிட்-19 கிருமிப் பரவலை அதிகப்படுத்தக்கூடும் என்று சீனாவின் சுகாதார நிபுணர்கள் கவலைப்படுகின்றனர்.
வசந்த விழா என்று அழைக்கப்படும் சீனப் புத்தாண்டு விடுமுறைக் காலம் வரும் சனிக்கிழமை (ஜனவரி 21) அதிகாரபூர்வமாகத் தொடங்குகிறது.
சீனாவின் பெருநகரங்களில் உள்ளவர்கள் புத்தாண்டு கொண்டாட தங்களது சொந்த ஊருக்குத் திரும்பத் தொடங்கி இருக்கிறார்கள்.
நாட்டிலுள்ள ரயில் நிலையங்
களிலும் விமான நிலையங்களிலும் பயணப்பெட்டிகளுடன் பெருங்கூட்டம் காணப்படுகிறது. பல்லாயிரம் பயணிகளை நேற்று காணமுடிந்தது.
கூட்டம் கூட்டமாக மக்கள் நடமாடத் தொடங்கி இருப்பதால் தற்போதைய புதிய வகை கொவிட்-19 கிருமியின் பரவல் மேலும் அதிககரிக்கும் என சுகாதார அமைப்புகள் கருதுகின்றன.
அதனால், பெரும்பாலான மருத்துவமனைகள் மருந்து களையும் மாத்திரைகளையும் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனைகளில் மருந்து மாத்திரை நிலவரங்களைக் கணக்கெடுத்து அவை ஏராளமான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
குறிப்பாக, கிராமப்புற மருத்துவமனைகளில் மருந்துகளையும் மருத்துவ சாதனங்களையும் பற்றாக்குறை இல்லாத அளவுக்கு வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
மருத்துவ வசதிகள் குறைவாக இருக்கும் இடங்களில் கிருமிப்பரவல் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால் அந்நிலையைத் தவிர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
ஷான்ஸி மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ‘ரெட் ஸ்டார் நியூஸ்’ என்னும் வட்டார செய்தி நிறுவனத்திடம் பேசினார்.
அவர் கூறுகையில், “கொவிட்-19 தொற்றுப் பரவலின் உச்சத்தைக் கடந்துவிட்டோம்.
“இருப்பினும் புத்தாண்டுக் கொண்டாட்டம் நெருங்குவதால் கிராமப்புறத்தினரையும் மூத்தோரையும் தொற்று தாக்குவதன் மூலம் இரண்டாம் அலை ஏற்
படுமோ என்று கவலைப்படுகிறோம்.
“கிருமிக்கு எதிரான மருந்து
களையும் கொவிட்-19 தொடர்பான இதர மருந்துகளையும் ஏராளமாகக் கையிருப்பு வைத்திருந்தால் மட்டுமே நாம் பாதிக்கப்படமாட்டோம் என்ற நம்பிக்கை பிறக்கும்,” என அவர் கூறினார்.