சோல்: சீனாவிலிருந்து வருவோருக்கு தென்கொரியா இன்று முதல் மீண்டும் குறுகிய காலத்துக்கான விசாவை வழங்கவுள்ளது.
கொவிட்-19 கிருமிப் பரவலை முற்றிலும் அழிக்கும் அணுகுமுறையை சீனா அவசரமாகக் கைவிட்டது. சீனாவின் எல்லைகளும் திறந்துவிடப்பட்டன.
அதனால் அந்நாட்டில் கிருமிப் பரவல் மோசமடைந்தது.
அதைத் தொடர்ந்து சில உலக நாடுகள் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு எல்லைக் கட்டுப்பாடுகளை முடுக்கிவிட்டன. அவற்றில் ஒன்றான தென்கொரியா, சீனப் பயணிகளுக்குக் குறுகிய கால விசா வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தப்போவதாக சென்ற மாதம் அறிவித்தது.
அதையடுத்து பதிலடி நடவடிக்கையாக தென்கொரியப் பயணிகளுக்கு விசா வழங்குவதை சீனா நிறுத்தியது.
கிருமிப் பரவல் நிலவரம் தற்போது சீராக இருப்பதையொட்டி சீனப் பயணிகளுக்கு மீண்டும் குறுகிய காலத்துக்கான விசாவை வழங்கப்போவதாக தென்கொரியா நேற்று அறிவித்தது. அதேபோல் தென்கொரியப் பயணிகளுக்கு மீண்டும் விசா வழங்குவது குறித்து ஆலோசிக்கப் போவதாக சீனா தெரிவித்தது.
சீனப் பயணிகள் சிலருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டது தென்கொரியா வந்தவுடன் உறுதியாகும். சென்ற வாரம் 1.4 விழுக்காட்டு சீனப் பயணிகள் மட்டுமே கிருமித்தொற்றுக்கு ஆளானதாக சோல் குறிப்பிட்டது. கட்டுப்பாடுகளை விதித்தபோது இந்த விகிதம் 20 விழுக்காடாக இருந்ததென சோல் சுட்டியது.
இந்த விவகாரத்தின் தொடர்பில் சீனப் பயணிகளுக்கான கொவிட்-19 பரிசோதனை விதிமுறைகள் உள்ளிட்டவை தொடர்ந்து நடப்பில் இருக்கும்.