ரோம்: இத்தாலியை நோக்கி அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் மூழ்கியது. இதில் குறைந்தது 59 அகதிகள் கடலில் மூழ்கி மாண்டனர்.
மாண்டோரில் 12 சிறுவர்களும் அடங்குவர். கைக்குழந்தை ஒன்று உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
பல சடலங்கள் கரையில் ஒதுங்கியதாக இத்தாலிய அதிகாரிகள் கூறினர்.
படகில் இருந்த மேலும் பலரை இன்னும் காணவில்லை என்றும் அவர்களைத் தேடும் பணி தொடர்வதாகவும் அவர்கள் கூறினர்.
அவர்களும் இறந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. எனவே மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
80 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடலில் விழுந்த சிலர் நீந்தியே கரையைச் சேர்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.
பல நாள்களுக்கு முன்பு துருக்கியிலிருந்து புறப்பட்டுச் சென்ற அப்படகில் மொத்தம் எத்தனை பேர் இருந்தார்கள் எனத் தெரியவில்லை.
ஆனால் படகில் 200க்கும் மேற்பட்டோர் இருந்ததாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இத்தாலியின் தென்கடற்பகுதியில் இருந்தபோது அப்படகு பாதியாக உடைந்ததாகக் கூறப்படுகிறது. அதை அடுத்து அதில் இருந்தவர்கள் கடலில் விழுந்தனர்.
படகில் இருந்த அகதிகளில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சோமாலியா, ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, படகில் இருந்தோரில் 20க்கும் மேற்பட்டோர் பாகிஸ்தானியர்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் கூறியுள்ளார்.
இச்சம்பவம் தமக்கு மிகுந்த கவலையை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
படகில் இருந்த பாகிஸ்தானியர்களின் நிலை குறித்து உடனடியாக கண்டுபிடித்துத் தம்மிடம் தெரிவிக்குமாறு பாகிஸ்தானிய அரசதந்திரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.