ஈப்போ: மலேசியாவின் முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் தம்மீது எந்த தவறும் இல்லை என்பதை சட்டத்தின் முன் நிரூபிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
தம்மீதான ஊழல், பணமோசடி குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு பேசிய முகைதீன், இது திட்டமிட்ட அரசியல் காரணங்களால் தூண்டப்பட்டவை என்று சாடினார்.
முகைதீனின் இந்தப் பேச்சு குறித்து மலேசிய ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர் அன்வார், மலேசிய ஊழல் தடுப்பு அமைப்பும் தலைமை சட்ட அலுவலகமும் முகைதீனின் குற்றச்சாட்டுக்கு ஏற்கெனவே பதிலளித்து விட்டதாக கூறினார்.
“என்னைப் பொறுத்தவரை, அவர் நீதிமன்ற வழக்குகளில் கவனம் செலுத்துவது நல்லது. குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தில் பதில் சொல்லுங்கள்,” என்றார் அன்வார்.
முகைதீன் வழக்கிற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
“அம்னோவின் கணக்குகள் முடக்கப்பட்டபோது, நடைமுறைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்தினார் அப்போதைய பிரதமர் முகைதீன். ஆனால், பெர்சத்துவிற்கு என்று வரும்போது, வேறுவிதமாக இருக்கிறது,” என்றார் தகவல், மின்னிலக்க அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஸில்.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் முகைதீன்மீது நேற்று முன்தினம் அதிகார முறைகேடு, ஊழல், மோசடி உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
2 மில்லியன் ரிங்கிட் பிணை அனுமதிக்கப்பட்ட முகைதீனின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டு உள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்
17 மாதங்கள் மலேசியாவின் பிரதமராக இருந்தார் முகைதீன்.