லண்டன்: சக ஊழியர்களைத் துன்புறுத்தியதாக பிரிட்டிஷ் துணைப் பிரதமர் டோமினிக் ராப்பிற்கு எதிராகச் செய்யப்பட்ட புகார்கள் உண்மையானவையே என்று அரசு சார்பற்ற சுயேட்சை விசாரணைக் குழு உறுதிசெய்தது; அதைத் தொடர்ந்து அவர் பதவி விலகியுள்ளார்.
திரு ராப், முறையற்ற வகையில் நடந்துகொண்டதற்காக கடந்த ஆறு மாதங்களில் பதவி விலகிய மூன்றாவது பிரிட்டிஷ் அமைச்சர் ஆவார்.
கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை வலுப்படுத்த பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு இது பின்னடைவாக அமையும் என்று கூறப்படுகிறது.
திரு ராப்பின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டதாகவும் இவ்வளவு நாள் அவர் வழங்கிய சேவைகளுக்கு நன்றி என்றும் திரு சுனக் வெள்ளிக்கிழமையன்று (21 ஏப்ரல்) தெரிவித்தார்.
கனத்த இதயத்துடன் திரு ராப்பின் பதவி விலகலை ஏற்றுக்கொள்வதாக அவர் கூறினார்.