புத்ராஜெயா: மலேசிய உணவகங்களில் புகைபிடிப்பதற்கு எதிராக சுகாதார அமைச்சு விதித்த தடையை எதிர்த்து எழுவர் தாக்கல் செய்த மனுவை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நீதிபதி ஸபாரியா முஹம்மது யூசோஃப் தலைமையிலான மூன்று பேர் அடங்கிய நீதிபதிகள் குழு அந்த ஒருமித்த முடிவை செவ்வாய்க்கிழமையன்று எடுத்தது.
1964ஆம் ஆண்டு நீதித்துறை ஆட்சிச் சட்டத்தின் 96ஆவது பிரிவின்கீழ் உள்ள தகுதிவிதிகளை நிறைவேற்றத் தவறியதால் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் குழு தீர்ப்பளித்தது.
புகைப்பழக்கமுள்ள அந்த ஏழு பேரும் உணவகங்களில் புகைபிடிப்பதற்கு எதிரான தடையை எதிர்த்து 2018ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியன்று உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
புகைபிடிப்பது குற்றச்செயலன்று என்றும் அது மலேசியாவில் தடைசெய்யப்பட்ட ஒன்றன்று என்றும் கூறிய அவர்கள், உணவகங்களில் புகைப்பிடிப்பதற்கு எதிரான தடை நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் தெரிவித்திருந்தனர் .