சிட்னி: ஆஸ்திரேலியாவில் வீசிய பலத்த காற்றால் சிலரின் சுற்றுலாத் திட்டங்கள் பாதிக்கப்பட்டன.
‘ஹவாயன் ஏர்லைன்ஸ்’ விமானம் ஒன்று பலத்த காற்று வீசியதால் ‘டர்பியூலன்ஸ்’ எனப்படும் நிலையை எதிர்கொண்டது. அத்தகைய வேளையில் விமானம் நடுவானில் சற்று ஆட்டம் காண்பதுண்டு.
எனினும், இந்த ‘ஹவாயன் ஏர்லைன்ஸ்’ விமானம் மோசமாக ஆட்டம் கண்டதால் அதிலிருந்த மூன்று பயணிகளை மருத்துவமனையில் அனுமதிக்க நேரிட்டது.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பள்ளி விடுமுறை காலத்தின் முதல் நாளான ஜூலை 1ஆம் தேதியன்று பருவநிலை மோசமடைந்தது. அதற்கு முதல் நாள் பலத்த காற்றால் அம்மாநிலத்தின் தலைநகரான சிட்னியில் சுமார் 100 விமானச் சேவைகள் ரத்துசெய்யப்பட்டன.
பிரிட்டனின் ‘தி கார்டியன்’ நாளிதழ் இதைத் தெரிவித்தது.
வெள்ளிக்கிழமையன்று ஹொனலுலுவிலிருந்து சிட்னிக்குச் சென்றுகொண்டிருந்த ஹவாயன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் ஆட்டம் கண்டது. பயணம் தொடங்கி கிட்டத்தட்ட ஐந்து மணிநேரம் கழித்து இவ்வாறு நிகழ்ந்தது.
விமானத்தில் இருந்த நான்கு பயணிகளுக்கும் மூன்று ஊழியர்களுக்கும் முதலில் விமானத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. நிலத்தில் இருந்த மருத்துவர்களுடன் தொடர்புகொண்டு சிகிச்சை வழங்கப்பட்டது.
வெள்ளிக்கிழமைஇரவு 7.45 மணியளவில் விமானம் சிட்னி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதற்குப் பிறகு மூன்று பயணிகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களுக்கு முதுகு உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது.