பட்டர்வொர்த்: மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவனைக் கடித்த சம்பவம் குறித்து கல்வி அமைச்சு விசாரித்து வருகிறது.
ஆசிரியர் கடித்ததால் அந்த மாணவன் மனரீதியாகப் பாதிக்கப்பட்டு பள்ளிக்குச் செல்ல மறுத்துவிட்டான்.
சமூக ஊடகத்தில் இதுகுறித்து வெளியான பதிவு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தற்போது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கல்வித் துணை அமைச்சர் லிம் ஹுவீ யிங் கூறினார்.
அத்தகைய குற்றச்சாட்டுகளை அமைச்சு கடுமையாக எடுத்துக்கொள்வதாக அவர் கூறினார். அது போன்ற சம்பவம் நடந்திருக்கவே கூடாது என்றார் அவர்.
தாயார் ஒருவர் தம்முடைய ஆறு வயது மகன் ஆசிரியரால் கடிக்கப்பட்டதாகக் கூறியதன் தொடர்பில் கருத்து தெரிவிக்குமாறு திருவாட்டி லிம்மிடம் கேட்கப்பட்டது.
முதலில் தமது மகன் பகடிவதை செய்யப்பட்டதாகக் தாயார் நினைத்தார். ஆனால் ஆண் ஆசிரியர் ஒருவர், தமது மகனைக் கடித்ததாகப் பின்னர் அவருக்குத் தெரியவந்தது. இந்நிலையில் மற்ற மாணவர்களும் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
காவல்துறையினர் சம்பவத்தை விசாரித்து வருகின்றனர்.