டோமோஹோன் (இந்தோனேசியா): உலகெங்கிலும் உள்ள விலங்குப் பிரியர்களின் வெற்றியாக அதிகம் பிரபலமில்லாத இந்தோனீசிய சந்தையில் நாய், பூனை இறைச்சி விற்பனைக்கு வெள்ளிக்கிழமையன்று அதிகாரிகள் தடை விதித்தனர்.
அங்கு இறைச்சிக் கடைக்காரர்கள் விலங்குகளைக் கொன்று விற்பது வழக்கமாக உள்ளது.
ஆண்டுக்கு ஒரு மில்லியன் நாய்கள், பூனைகள் கொல்லப்படும் இந்தோனீசியாவில் வடக்கு சுலவேசி மாவட்டத்தில் உள்ள டோமோஹோன் சந்தையில் தடை அமலுக்கு வந்துள்ளது. இந்தோனீசியாவில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் நாய் இறைச்சியை சாப்பிடுவதில்லை.
ஆனால் வடக்கு சுலவேசியில் நாய் மற்றும் பூனை இறைச்சியை உண்பது மினாஹாசா மக்களின் பாரம்பரிய பழக்கமாகும்.
இந்த நிலையில் டோமோஹோன் அதிகாரிகள் விலங்குவதை மற்றும் வெறிநாய்க்கடி உள்ளிட்ட இறைச்சியை சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல அபாயங்களைக் குறித்து குடியிருப்பாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அதிகாரிகள் முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
டோமோஹோன் நகரத்தின் செயலாளர் திரு எட்வின் ரோரிங், நாய்கள் மற்றும் பூனைகளின் வியாபாரத்தில் இருந்து டோமோஹோன் முற்றிலும் விடுபட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“டோமோஹோனில் நாய்கள் மற்றும் பூனைகளை உண்ணும் ஆர்வத்தை குறைப்பதற்கான வழி சந்தையில் அவை விற்கப்படுவதை தடுப்பதன் மூலம் தொடங்குகிறது,” என்றும் அவர் கூறினார்.
தடையை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முன்னாள் நாய், பூனை இறைச்சி வியாபாரிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.