கராச்சி: தென் பாகிஸ்தானில் ரயில் தடம்புரண்டதில் 15 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.
கராச்சியில் இருந்து அப்போடாபாத் நகருக்குச் சென்றுகொண்டு இருந்த சஹாரா விரைவு ரயிலின் எட்டுப் பெட்டிகள் தடம்புரண்டதாக மோஷின் ஷையல் என்ற ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.
அந்த விபத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். 40க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர் என்று ரயில்வே அதிகாரிகள் கூறியதாக பாகிஸ்தான் அரசாங்கத் தொலைக்காட்சி அறிவித்தது.
தென் சிந்து மாநிலத்தில் உள்ள நவாப்ஷா என்ற நகரில் சஹாரா என்ற ரயில் நிலையத்திற்கு அருகே அந்த விபத்து நிகழ்ந்தது.
விபத்தில் பலர் மாண்டனர். பலர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு நிவாரண ரயில் அனுப்பப்பட்டு உள்ளது என்று திரு ஷா என்ற மாநில ரயில்வே அதிகாரியை மேற்கோள்காட்டி ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
விபத்து நிகழ்ந்த இடத்தில் பலரும் ரயில் பெட்டிகளின் சன்னல்களை உடைத்து உள்ளே சிக்கிக்கொண்டு இருந்தவர்களைக் காப்பாற்றியதை உள்ளூர் ஊடகங்கள் பதிவேற்றிய படங்கள் காட்டின.
ஒரு ரயில் பெட்டி தலைகுப்புற கவிழ்ந்து கிடந்தது. பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதிக்கொண்டு கிடந்ததும் தெரிந்தது.