வாஷிங்டன்: சீனா அதன் வேவு பார்க்கும் பலூனின் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
இந்தத் தற்காலிக நிறுத்திவைப்பு எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது பற்றி தங்களுக்குத் தெரியாது என்று அவர்கள் கூறினர். ஆனால், வேவு பார்க்கும் பலூன் திட்டத்தில் சீன அரசாங்கம் செய்துள்ள முதலீடுகளை வைத்துப் பார்க்கும்போது, பெய்ஜிங் அதை மீண்டும் தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பிப்ரவரியில் அமெரிக்காவைக் கடந்த வேவு பலூன், பசிபிக் பகுதியில் ராணுவத் தளங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்த தகவல் பெறுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்தது என்று அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.
படங்கள் மற்றும் தொடர்புகள் குறித்த தகவலறிய அந்த பலூன் அதிநவீனக் கருவிகளை ஏந்தியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர். ஆனால், அந்த வேவு பலூன் சேகரித்த தகவலில் எந்த அளவு பெய்ஜிங்கிற்கு அனுப்பப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை.