பெங்களூரு: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான ‘லிங்க்ட்இன்’ சமூக ஊடகத் தளம், 668 ஊழியர்களை தான் ஆட்குறைப்பு செய்யப்போவதாக திங்கட்கிழமை தெரிவித்தது.
அந்நிறுவனம் இவ்வாண்டு மேற்கொள்ளும் இரண்டாவது ஆட்குறைப்பு நடவடிக்கை இதுவாகும். கடந்த மே மாதம் 716 பேரை அந்நிறுவனம் ஆட்குறைப்பு செய்தது.
இம்முறை ஆட்குறைப்பு நடவடிக்கையால் பொறியியல், திறனாளர், நிதித் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் பாதிக்கப்படவுள்ளனர்.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால், லிங்க்ட்இன் நிறுவனத்தில் பணியாற்றும் ஏறக்குறைய 20,000 ஊழியர்களில் 3 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவர்.
இவ்வாண்டின் முற்பாதியில் தொழில்நுட்பத் துறையில் 141,516 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். ஒப்புநோக்க, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை வெறும் 6,000ஆக இருந்தது.
நிபுணர்களுக்கான சமூக ஊடகத் தளமான லிங்க்ட்இன், விளம்பர விற்பனை மூலம் வருவாய் ஈட்டுகிறது. வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் இடையே பொருத்தமானவர்களைத் தேடி பணியமர்த்த, லிங்க்ட்இன் தளத்தைப் பயன்படுத்தும் நிபுணர்களுக்கு சந்தாக் கட்டணம் விதிப்பதன் மூலமும் லிங்க்ட்இன் வருவாய் பெறுகிறது.