வாஷிங்டன்: அமெரிக்கா, மேலும் ஆகாயத் தற்காப்பு ஆயுதங்களை மத்திய கிழக்கிற்கு அனுப்புகிறது.
அந்தப் பகுதியில் அமெரிக்கத் துருப்புகள் தாக்கப்பட்டதை அடுத்து அதற்குப் பதிலாக அமெரிக்கா அதி உயர ஆகாயத் தற்காப்பு ரேடார் ஆயுதங்களையும் கூடுதலாக பேட்ரியாட் தற்காப்பு ஏவுகணைகளையும் அனுப்பும் என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு சனிக்கிழமை தெரிவித்தது.
அமெரிக்கா அண்மைய வாரங்களில் மத்திய கிழக்குப் பகுதிக்கு கணிசமான அளவுக்கு கடற்படை போர் கலன்களை அனுப்பி இருக்கிறது.
இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களும் ஆதரவு கப்பல்களும் அங்கு நிலைகொண்டுள்ளன.
அமெரிக்கக் கடற்படை வீரர்கள் 2,000 பேர் அனுப்பப்பட்டு இருக்கிறார்கள்.
மத்திய கிழக்கில் இஸ்ரேல்- ஹமாஸ் பேர் காரணமாக பதற்றம் அதிகமாகி வருகிறது.
அந்தப் பிரச்சினையில் ஈரான் தலையிடக் கூடும் என்பதால் அதைக் கருத்தில் கொண்டு அமெரிக்கா முழு விழிப்பு நிலையில் இருந்து வருகிறது.
“ஈரானின் அணுகுமுறை, மத்திய கிழக்கில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற அமைப்புகளின் செயல்பாடுகள் ஆகியவை தொடர்பில் அதிபர் ஜோ பைடன் விவாதிப்புக் கூட்டங்களை நடத்தினார்.
“அதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் வளங்களை அதிகமாக்குவது என்று முடிவு செய்யப்பட்டு, கூடுதல் ஆயுதங்களை மத்திய கிழக்கிற்கு அனுப்பும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது,” என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் ஆஸ்டின் அறிக்கையில் தெரிவித்தார்.
“அமெரிக்கா, மத்திய கிழக்கில் தற்காப்பு அரணை வலுப்படுத்தி வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் அமெரிக்கப் படைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்,” என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணைகள் உலகிலேயே அதி நவீன ஆகாயத் தற்காப்பு ஆயுதங்கள் என்று கருதப்படுகின்றன.
பல நாடுகளும் அவற்றைப் பெற விரும்புவதால் அந்த ஏவுகணைகளுக்குப் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது.
அதி உயர ஆகாயத் தற்காப்பு ரேடார் ஆயுதம் மிகவும் சக்தி வாய்ந்தது. அதை 2016ல் சீனாவுக்கு எதிராக தென்கொரியாவில் அமெரிக்கா நிறுத்தி வைத்து இருந்தது.
மத்திய கிழக்கில் இஸ்ரேல்- ஹமாஸ் போர் வெடித்ததை அடுத்து ஈராக்கிலும் சிரியாவிலும் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக தாக்குதல்கள் அதிகமாகி வருகின்றன.
ஈரான் ஆதரவு பெற்ற ஓர் அமைப்பு ஏமானில் இருந்து நான்கு குருஸ் ஏவுகணைகளைப் பாய்ச்சியது. அவற்றையும் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட வானூர்திகளையும் அமெரிக்கப் போர் கப்பல் சுட்டு வீழ்த்திவிட்டது.