காஸா: இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான போரால் காஸா பகுதியில் சுமார் 50,000 கர்ப்பிணிகள் அவல நிலைக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பாலியல், இனப்பெருக்க சுகாதார அமைப்பான யுஎன்எஃப்பிஏ இவ்வாறு கணித்துள்ளது. பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளில் ஏறக்குறைய 5,500 பெண்கள் அடுத்த ஒரு மாதக் காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் தானாகவே குழந்தை பெற்றெடுக்கும் அவல நிலை ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களால் காஸாவின் சுகாதாரக் கட்டமைப்பு பெரும் சிக்கல்களை எதிர்நோக்குவது இதற்குக் காரணம். இஸ்ரேல் நடத்தும் ஆகாயப் படைத் தாக்குதல்களால் மருத்துவ நிலையங்களுக்குப் பயணம் மேற்கொள்வது சவாலாக இருந்தும் வருகிறது.
விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ளவிருக்கும் பெண்களுக்கு வழங்கப்படும் உதவிப் பொட்டலங்கள் பல, தற்போது எகிப்தில் சிக்கியிருப்பதாக பாலஸ்தீன வட்டாரங்களுக்கான யுஎன்எஃப்பிஏ பிரதிநிதி டாமினிக் ஏலன் தெரிவித்தார். காஸாவுக்குள் கொண்டுசெல்ல அனுமதி தேவைப்படும் நிவாரணப் பொருள்களில் அவை அடங்கும்.
கர்ப்பிணிகளுக்கான உதவிப் பொட்டலம் ஒவ்வொன்றிலும் அடிப்படை தேவைக்கான பொருள்கள் உள்ளன. ஒவ்வொரு பொட்டலத்திலும் ஒரு சோப் கட்டி, 101X101 சென்டிமீட்டர் பரப்பளவு கொண்ட பிளாஸ்டிக் பை, தொப்புள் கொடியை வெட்டுவதற்கான கத்தரிக்கோல், தாயையும் பிள்ளையையும் சுத்தம் செய்து மறைப்பதற்கான பஞ்சுகள் போன்ற பொருள்கள் இருக்கும்.
வேறு வழியே இல்லாதபோதுதான் கர்ப்பிணிகளுக்குப் பொட்டலங்களை வழங்க யுஎன்எஃப்பிஏ திட்டமிட்டிருந்தது. ஆனால், போர் தொடங்கியதிலிருந்து பொட்டலங்களை விநியோகிப்பது வழக்கமாகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரியான சுகாதாரப் பராமரிப்பு வசதி இல்லாதபோது கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் நோய்த்தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க உதவிப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன.
வட காஸாவிலிருந்து வெளியேறுமாறு ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இஸ்ரேல், சென்ற வாரம் உத்தரவிட்டது. அவர்களில் சுமார் 19,000 கர்ப்பிணிகள் அடங்குவர் என்று பாலஸ்தீன குடும்பக் கட்டுப்பாட்டு, பாதுகாப்புச் சங்கம் கூறியது.
அந்தச் சங்கம், அனைத்துலகப் பெற்றோர் கட்டுப்பாட்டுச் சம்மேளனத்தைச் (இன்டர்னேஷனல் பிளான்ட் பேரன்ட்ஹூட் ஃபெடரேஷன்) சேர்ந்த லாப நோக்கில்லா அமைப்பு. போரினால் ஏற்பட்டுள்ள மனவுளைச்சலாலும் அதிர்ச்சியாலும் காஸாவைச் சேர்ந்த பெண்கள் தங்கள் குழந்தைகளை இழந்து வருவதாக அந்த அமைப்பு சொன்னது.