பேங்காக்: நவம்பர் முதல் அடுத்த ஆண்டு மே வரை இந்தியா, தைவானிலிருந்து வரும் பயணிகளுக்கு விசா விதிமுறைகளை தாய்லாந்து நீக்கும் என்று அரசாங்க அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கூடுதலான சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் விதமாக இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சீனாவிலிருந்து வருவோருக்கான விசா விதிகளை செப்டம்பரில் தாய்லாந்து நீக்கியிருந்தது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி முடிவடையவிருக்கும் விசா விலக்கு நிரந்தரமாக்கப்படலாம் என்று தாய்லாந்துப் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் கூறியிருந்தார்.
இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் 29ஆம் தேதிவரை தாய்லாந்துக்கு 22 மில்லியன் பேர் சென்றனர். இதன்மூலம் தாய்லாந்துக்கு 927.5 பில்லியன் பாட் (S$35.14 பி.) வருவாய் கிடைத்தது.
“இந்தியா, தைவானிலிருந்து வருவோர் தாய்லாந்தில் 30 நாள்களுக்குத் தங்கலாம்,” என்று அந்த அரசாங்க அதிகாரி தெரிவித்தார்.
இவ்வாண்டு இதுவரை இந்தியாவிலிருந்து 1.2 மில்லியன் பயணிகள் தாய்லாந்துக்குச் சென்றனர். தாய்லாந்துக்குப் பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில் மலேசியா, சீனா, தென்கொரியாவுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது.
இந்தியச் சந்தையை இலக்காகக் கொண்டு கூடுதலான விமான நிறுவனங்கள் செயல்படுவதால் இந்தியாவில் இருந்து தாய்லாந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவ்வாண்டு தாய்லாந்து 28 மில்லியன் பயணிகளை எதிர்பார்க்கிறது.