‘ரீஃபண்ட் ஃபிராடு’ எனப்படும் இணைய சில்லறை வர்த்தகங்களை குறிவைக்கும் மோசடி தொடர்பாக சிங்கப்பூரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த இணைய சில்லறை வர்த்தக மோசடியால் அமெரிக்காவில் உள்ள பெரிய இணைய வர்த்தக நிறுவனங்கள் பல மில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த சிங்கப்பூர் காவல்துறை, 23லிருந்து 25 வயது வரையிலான மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
இதன் தொடர்பில் அமெரிக்க நீதித்துறை சென்ற வாரம் அனைத்துலக இணைய மோசடிக் கும்பல் என நம்பப்படும் 10 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி அறிக்கை மூலம் விளக்கியது. இவர்கள் அனைவரும் இணைய சில்லறை வர்த்தகங்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டதாக அறிக்கை சுட்டியது.
‘ஆர்டிமிஸ் ரீஃபண்ட் குருப்’ என்று அழைக்கப்படும் இந்தக் கும்பல் தங்களுக்காகவும் மற்றவர் சார்பாகவும் பொருள்களை 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை திருடி வந்துள்ளதாக அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தின் வடக்குப் பகுதி வழக்கறிஞர் விளக்கினார்.
“வாங்கிய பொருள்களுக்கான பணத்தை திருப்பித்தரக் கோரும் இந்த மோசடியை கும்பல் இணையத்தில் பரவலாக விளம்பரப்படுத்தியது.
இதைத் தொடர்ந்து மோசடியின் ஒரு பகுதியாக பல நூறு வாடிக்கையாளர்களை பொருள்களை குறிப்பிட்ட வர்த்தகங்களில் வாங்கும்படி இந்த மோசடிக் கும்பல் கூறும்.
பின்னர், வாங்கிய பொருள்களின் விவரங்களைப் பெற்று இந்தக் கும்பல் அந்த இணைய வர்த்தகங்களைத் தொடர்பு கொண்டு பொருள்களுக்காக செலுத்தப்பட்ட கட்டணத்தைத் திருப்பித்தரும்படி கூறும்.
“பிறகு, பொருள்களுக்கான கட்டணம் திருப்பித் தரப்பட்டவுடன் அந்தப் பொருள்களையும் மோசடிக் கும்பலின் வாடிக்கையாளர்கள் வைத்துக் கொண்டு கிடைத்த பணத்தையும் வைத்துக்கொள்ளும்.
“இதைத் தொடர்ந்து ஆர்டிமிஸ் ரீஃபண்ட் குருப் பொருள்களுக்கான கட்டணத்தில் 15லிருந்து 20 விழுக்காடு பணத்தை மோசடி மூலம் பயன்பெற்ற வாடிக்கையாளரிடம் இருந்து வசூலிக்கும்,” என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.