ஜெனீவா: கொவிட்-19 கிருமிப் பரவல் இன்னும் மிரட்டலாகவே தொடர்வதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
“இந்தக் கிருமி எல்லா நாடுகளிலும் பரவியுள்ளது. இன்னும் அச்சுறுத்தலாக விளங்குகிறது,” என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் சமூக ஊடகங்களில் வெளியான கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற அக்கலந்துரையாடலில், கிருமிப் பரவல் தொடர்பான தயார்நிலை, தடுப்பு நடவடிக்கைப் பிரிவின் இடைக்கால இயக்குநர் மரியா வான் கெர்கோவ் பேசினார்.
“கொவிட்-19 கிருமி மாற்றமடைந்து பரவுவது தொடர்வதால் விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியம்,” என்றார் அவர்.
அண்மைக் காலமாக கொவிட்-19 கிருமியின் ‘எக்ஸ்பிபி.1.5’, ‘எக்ஸ்எக்ஸ்பி.1.16, ‘இஜி.5’ ஆகிய மூன்று திரிபுகள் அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டன. ‘பிஏ.2.86’ உள்ளிட்ட மேலும் ஆறு திரிபுகளும் கண்காணிக்கப்படுவதாகக் கூறப்பட்டது.
தற்போது ‘பிஏ.2.86’ திரிபு அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. உலகெங்கும் இந்த வகை கொவிட்-19 கிருமித் திரிபின் பரவல், மெதுவாக ஆனால் நிலையாக அதிகரித்து வருவதாக திருவாட்டி வான் கெர்கோவ் குறிப்பிட்டார்.
தடுப்பூசிகள் கொவிட்-19 பாதிப்புக்குப் பிந்திய அபாயத்தைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றுவதற்கு ஆதாரம் இருப்பதாக அவர் சொன்னார். உலகம் முழுவதும் 13.5 பில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்றார் அவர்.