பாரிஸ்: பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெட்டி என்பவரின் தலையை 2020ஆம் ஆண்டில் பயங்கரவாதி எனச் சந்தேகிக்கப்பட்ட நபர் துண்டித்ததை அடுத்து அச்சம்பவம் தொடர்பில் பதின்ம வயதினர் அறுவர், பொதுமக்கள் பார்வையிட முடியாத நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலையாகினர்.
ஆசிரியரின் தலைத் துண்டிப்பில் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகத்தின்பேரில் இந்த அறுவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பேச்சு சுதந்திரம் பற்றிய பாடத்தின்போது மாணவர்களிடம் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை திரு சாமுவேல் பெட்டி காட்டியதைத் தொடர்ந்து முஸ்லிம் மாணவர்களின் பெற்றோர் பலர் கோபமடைந்தனர்.
திரு சாமுவேல் பெட்டி வகுப்பில் கேலிச்சித்திரம் காட்டியது குறித்து 15 வயது மாணவி தன் பெற்றோரிடம் கூறியதாகவும் உண்மையில் அப்போது அந்த மாணவி வகுப்பில் இல்லை என்பதாகவும் அறியப்படுகிறது. பொய்யுரைத்த குற்றச்சாட்டு அந்த மாணவி மீது சுமத்தப்படும்.
எஞ்சிய ஐவரும் தாக்குதலின்போது 14 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்டவர்களாக இருந்தனர். கொலையாளியிடம் திரு சாமுவேல் பெட்டி யார் என்று காண்பித்தது, பள்ளியிலிருந்து ஆசிரியர் வெளியேறிய தருணத்தைக் கண்காணித்தது தொடர்பில் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்படும்.
இளங்குற்றவாளிகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் இந்த அறுவருக்கும் இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.