பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் சரக்குக்கிடங்கிற்கான கட்டுமானத் தளம் இடிந்து விழுந்ததில் மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் மாண்டனர். இருவருக்குப் படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெளிநாட்டு ஊழியர்களின் நலனுக்கு அவர்களது முதலாளிகள் பொறுப்பு என்றும் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் முதலாளிக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய சமூகப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட ஒன்பது வெளிநாட்டு ஊழியர்களில் ஐந்து பேர் அமைப்புடன் பதிவு செய்யப்படவில்லை என்பதால் அமைப்பின் மூலமாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்தார்.
வெளிநாட்டு ஊழியர்களைப் பதிவு செய்யாத, அவர்களுக்குப் பங்களிக்காத முதலாளிகளுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10,000 ரிங்கிட் அபராதம், இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து கட்டுமானத்துறை ஊழியர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டு ஊழியர்களும் மலேசிய சமூகப் பாதுகாப்பு அமைப்புடன் பதிவு செய்யப்பட வேண்டும்.
சம்பவத்தில் மாண்ட இரு ஊழியர்களும் காயமுற்ற இருவரும் அமைப்புடன் பதிவு செய்யப்பட்டவர்கள் என்றபோதும் 2020ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு வரை அவர்களுக்கான பங்களிப்புகள் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
மாண்ட இன்னொருவர் அமைப்புடன் பதிவு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
இடிபாடுகளுக்கு அடியில் நால்வர் சிக்கியிருக்கலாம் என்று முதலில் நம்பப்பட்டது. ஆனால் அவர்கள் அனைவரும் கட்டடம் இடிந்து விழுந்தபோது தப்பி ஓடி தற்போது பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
கட்டப்பட்டு வந்த சரக்குக் கிடங்கு இடிந்து விழுந்தது குறித்து பினாங்கு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பங்ளாதேஷை சேர்ந்தவர்கள் என்பதால் பங்ளாதேஷ் தூதரகத்துடன் மலேசிய மனிதவள அமைச்சு இணைந்து செயல்பட்டு வருகிறது.