செப்பாங்: மலேசியாவுக்கு டிசம்பரில் கூடுதல் பயணிகள் வருவர் என எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் 14 குடிநுழைவு முகப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அந்த விமான நிலையத்தின் இரு முனையங்களில் 78 முகப்புகள் இருந்ததாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.
“வெளிநாட்டுப் பயணிகளின் வருகை சுமுகமாக நடந்தேறுவதை உறுதிசெய்ய கூடுதலான இந்த 14 முகப்புகள் உதவும்,” என்றார் அவர்.
விசா விதிமுறை தளர்த்தப்பட்டு இருப்பதால் குறிப்பிட்ட சில அம்சங்களைக் கவனிக்கத் தேவையில்லை என்று அர்த்தமாகாது என்று பயணிகளுக்கு திரு ருஸ்லின் நினைவுபடுத்தினார்.
மலேசியாவிலிருந்து நாடு திரும்புவதற்கான விமானப் பயணச்சீட்டுகளையும் ஹோட்டல் முன்பதிவையும் குடிநுழைவுத்துறை அதிகாரிகளிடம் காண்பிப்பது அவற்றில் அடங்கும்.
மேலும், மலேசியாவுக்கு வந்திறங்கிய பயணிகள் தங்களிடம் உள்ள ரொக்கத்தின் மதிப்பை இனி அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“மலேசியாவுக்கு வரும் பயணிகள், தங்கள் வசம் உள்ள ரொக்கத்தின் மதிப்பை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தும் விதியிலிருந்து இப்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை நோக்கிச் செயல்பாடுகள் மாறிவரும் சூழலில் கடன்பற்று அட்டைகள் மாற்றுத் தெரிவாக அமைகின்றன,” என்றார் அவர்.
இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் மலேசியா செல்லும் பயணிகளுக்கு 30 நாள் விசா விலக்குத் திட்டத்தை மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அண்மையில் அறிவித்திருந்தார்.
விசாவுக்கான தளர்வு டிசம்பர் 1 முதல் அடுத்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிவரை நடப்பில் இருக்கும்.