பிரசிலியா: பிரேசிலின் சாவோ ஜோஸ் நகரில் மருத்துவமனைப் பிணக்கிடங்கில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டார் 90 வயது மூதாட்டி.
நோர்மா சில்வெரா ட சில்வா என்ற மூதாட்டி உயிரிழந்துவிட்டதை டிசம்பர் 1ஆம் தேதியன்று மருத்துவமனை உறுதிப்படுத்தியதை அடுத்து, உடலை எடுப்பதற்காக அங்கு சுடுகாட்டுப் பணியாள் வந்தார்.
மோசமான உடல்நிலையுடன் மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கல்லீரல் பிரச்சினையால் சுயநினைவிழந்த நிலையில் அந்த மூதாட்டி இருந்தார்.
பின்னர், அவர் உயிர் பிரிந்துவிட்டதாக ட சில்வாவின் மகனுக்கும் பராமரிப்பாளருக்கும் மருத்துவமனை செய்தி அனுப்பியது.
குடும்பத்தார் கடைசியாக அவரைப் பார்ப்பதற்குள் மருத்துவமனை மூதாட்டியின் உடலைப் பிணக்கிடங்குக்கு அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பிணக்கிடங்குக்குச் சென்ற சுடுகாட்டுப் பணியாள், மூதாட்டியின் உடலில் இன்னும் வெப்பம் உள்ளதைப் பையைத் தொட்டுப் பார்த்ததில் உணர்ந்தார்.
சடலப் பையை உடனே அவர் திறந்தபோது மூதாட்டி இன்னும் மூச்சுவிடுவதைக் கண்டார்.
இரண்டு மணி நேரமாக மூதாட்டி பையில் மூச்சுவிடத் திணறியது தெரியவந்துள்ளது.