குளுவாங்: கேடிஎம் ரயில் சேவையைப் பயன்படுத்தும் மலேசியர்கள் விரைவில் குறைவான கட்டணத்தில் பயணிக்கும் அனுபவத்தைப் பெறவிருக்கின்றனர்.
ஒவ்வொரு வழியிலும் ஐந்து ரிங்கிட் கட்டணம் மட்டுமே இருக்கும் என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் யோசனை கூறியுள்ளதாக ‘த ஸ்டார்’ தகவல் வெளியிட்டிருந்தது.
தற்போது ஜோகூரிலிருந்து சிங்கப்பூரில் உள்ள உட்லண்ட்சுக்குச் செல்ல ஐந்து ரிங்கிட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் எதிர்திசையில் பயணம் செய்யும்போது ஐந்து சிங்கப்பூர் வெள்ளியாக கட்டணம் உள்ளது. இது, 17.30 ரிங்கிட்டுக்குச் சமமாகும்.
இந்த நிலையில் இரு வழிகளிலும் ஒரே மாதிரி கட்டணம் வசூலிப்பது குறித்து மலேசியா பரிசீலித்து வருகிறது.
“நமது குடிமக்களுக்காக பயணச் சீட்டின் விலையை மாற்றியமைக்கும் உத்தேச திட்டத்தை ‘கேடிஎம்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஜோகூரிலிருந்து சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் திரும்பும் கட்டணங்களில் வித்தியாசம் உள்ளது. கேடிஎம்மின் யோசனையை நான் வரவேற்கிறேன். இந்த விவகாரம் குறித்து நில பொதுப் போக்குவரத்து முகவையிடம் ஆலோசனை நடத்தப்படும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இதற்கு முடிவு செய்யப்படும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் டிஏபி மாநாட்டிற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
கேடிஎம் ரயில் சேவையை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் 10,000 பயணிகள் அதில் பயணம் செய்வதாக அமைச்சர் கூறினார்.
கேடிஎம் ரயில் சேவை முழுமையாக மலேசியாவுக்குச் சொந்தமானது என்பதால் உத்தேச கட்டணம் குறித்து சிங்கப்பூருடன் மலேசியா ஆலோசிக்க வேண்டியது இல்லை என்றார் அவர்.
ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ரயில் இணைப்புத் திட்டம் (ஆர்டிஎஸ்) நிறைவடைந்ததும் தற்போதைய கேடிஎம் ரயில் சேவை தொடர்வது குறித்து சிங்கப்பூரிடம் ஆலோசிக்கப்பட்டதா என்று கேட்கப்பட்டதற்கு அதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது என்று திரு லோக் கூறினார்.
“ஆர்டிஎஸ் ரயில் திட்டம் முடிய மூன்று ஆண்டுகள் இருப்பதால் அது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 26ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் லோக், ஆர்டிஎஸ் ரயில் இணைப்புத் திட்டம் முடிந்த பிறகு கேடிஎம் சேவையைத் தொடர்ந்து அனுமதிப்பது குறித்து சிங்கப்பூரிடம் மலேசியா ஆலோசனை நடத்தும் என்று கூறியிருந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே முந்தைய இருதரப்பு ஒப்பந்தத்தின்கீழ், ஆர்டிஎஸ் ரயில் திட்டம் முடிந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு கேடிஎம் ரயில் சேவையை நிறுத்துவது என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட நிபந்தனைகளில் ஒன்று என்பதை அப்போது அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.