சோல்: கொவிட்-19 அபாயநிலை அளவை 2024ஆம் ஆண்டில் குறைக்கக்கூடும் என தென்கொரியா தெரிவித்து உள்ளது.
கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கான இரண்டாம் கட்ட அபாயநிலை தற்போது அந்நாட்டில் நடப்பில் உள்ளது.
இதனை மூன்றாம் கட்டத்துக்குத் தாழ்த்த இருப்பதாக தென்கொரிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பு செவ்வாய்க்கிழமை கூறியது.
அந்த அமைப்பின் ஆணையாளர் ஜி யங்-மி செய்தியாளர்களிடம் கூறுகையில், “அபாயநிலையைத் தாழ்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இருப்பினும், அதனை எப்போது அமல்படுத்துவது என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.
“இப்போதைக்கு நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். குளிர்காலம் முடிந்த பின்னர் (அடுத்த ஆண்டு) அபாயநிலையைக் குறைக்கக் கருதி உள்ளோம்,” என்றார்.
“தொற்று அபாயநிலையைக் குறைத்த மறுகணமே எல்லாம் வழக்கநிலைக்குத் திரும்பிவிடாது. அப்போதைக்கு உரிய நடவடிக்கை குறித்து ஆலோசிப்போம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.