ஜோகூர் பாரு: ஜோகூரில் உள்ள மலேசிய குடிநுழைவுத் துறை சோதனைச் சாவடியின் சில முகப்புகள் மேம்பாட்டுப் பணிக்காக மூடப்படுகின்றன.
மின்வாயில்கள் உள்ளிட்ட சில முகப்புகளில் 2024 ஜனவரி 15ஆம் தேதி வரை புதுப்பிப்பு பணிகள் நடைபெறும் என்று டிசம்பர் 12ஆம் தேதி ஃபேஸ்புக் பதிவில் ஜோகூர் குடிநுழைவுத் துறை தெரிவித்தது.
புறப்பாடு மண்டபத்தில் உள்ள முகப்புகள் மூன்று கட்டங்களாக மூடப்படுகிறது. முதல் கட்டம் டிசம்பர் 15, 2வது கட்டம் டிசம்பர் 21, 3வது கட்டம் டிசம்பர் 28 தேதிகளில் சில முகப்புகள் செயல்படாது.
வருகையாளர் கூடத்திலும் இதே மூன்று முகப்புகளிலும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகள் 2023 டிசம்பர் 28, 2024 ஜனவரி 3 மற்றும் ஜனவரி 9 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறும்.
2023ஆம் ஆண்டில் 7.8 மில்லியன் சிங்கப்பூரர்கள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய பயணத்துறை, கலை, கலாசார அமைச்சின் தகவல் தெரிவிக்கிறது.
தற்போது சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 2023 ஜூலை வரையில் 4.5 மில்லியனுக்கும் மேற்பட்ட இத்தகைய பயணிகள் பதிவாகியுள்ளனர்.
இதற்கிடையே சில முகப்புகள் மூடப்படுவதை கவனத்தில் கொண்டு பயணத்திற்கு முன்கூட்டியே திட்டமிடுங்கள் என்று குடிநுழைவுத் துறை அனைத்துப் பயணிகளையும் அறிவுறுத்தியுள்ளது. குடிநுழைவு முகப்புக்குச் செல்வதற்கு முன்பு தகுதியான பயண ஆவணங்கள் இருப்பதை உறுதி செய்யுமாறு அது கேட்டுக் கொண்டது.