லண்டன்: மின்சிகரெட்டுகளுக்கும் புகையிலை தொடர்பான சட்டங்களைப் பயன்படுத்துமாறு அரசாங்கங்களை உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன், சுவையூட்டப்பட்ட மின்சிகரெட்டுகளைத் தடை செய்ய வேண்டும் என்று அது வலியுறுத்தியுள்ளது.
சிகரெட்டுகளுக்குப் பதிலாக மின்சிகரெட்டுகளை விற்க சிகரெட்டு நிறுவனங்களின் திட்டங்களுக்கு இது பின்னடைவாக அமைந்துள்ளது.
புகைப்பிடித்தல் காரணமாக ஏற்படும் மரணங்கள், நோய்கள் ஆகியவற்றைக் குறைக்கும் வழியாக மின்சிகரெட்டுகளை சில ஆராய்ச்சியாளர்களும் அரசாங்கங்களும் பார்க்கின்றனர்.
ஆனால் மின்சிகரெட்டுகளைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை அவசியம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட மின்சிகரெட்டுகள் உதவும் என்பதை நிரூபிப்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அது ஆய்வுகளை மேற்கோள்காட்டியது.
அதுமட்டுமல்லாது, உடல் ஆரோக்கியத்துக்கு மின்சிகரெட்டுகள் கேடு விளைவிக்கும் என்றும் அது கூறியது.
மேலும், சிறுவர்கள், இளையர்கள் உட்பட புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதோரையும் மின்சிகரெட்டுகள் நிக்கோட்டினுக்கு அடிமையாக்கக்கூடும் என்று அது எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்துக்கு உட்பட்ட நாடுகளில் பெரியவர்களைவிட 13 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள் மின்சிகரெட்டுகளை அதிகம் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்குத் தீவிர சந்தைப்படுத்துதல் காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியது.
“இளம் வயதிலேயே சிறுவர்கள் மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் நிக்கோட்டினுக்கு அடிமையாகக்கூடும்,” என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் கேபிரியசுஸ் தெரிவித்தார்.
மின்சிகரெட்டுகளில் மெந்தோல் போன்ற சுவையூட்டிகளைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அழைப்பு விடுத்தது.
அதுமட்டுமல்லாது, மின்சிகரெட்டுகளைப் பொது இடங்களில் பயன்படுத்துவோருக்கு உயர் வரிகளையும் தடைகளையும் விதிக்க வேண்டும் என்று அது கூறியது.