ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவில் வியாழக்கிழமை (டிசம்பர் 14) மாலை 4 மணியிலிருந்து கனத்த மழை பெய்ததால் 11 இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதுகுறித்து மாலை 4.30 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஜோகூர் பாரு நகர அமைப்பு கூறியது.
தாமான் சிட்டியாவின் இரு பகுதிகள், ஜாலான் ரோஸ்மேரா, ஜாலான் முகமது அமின் 7 போன்ற இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக அமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும், வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களுக்கு உதவும் வகையில், போக்குவரத்தைக் கட்டுப்படுத்த எம்பிஜெபி என்ற மின்னல் படை அனுப்பப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
ஜாலான் பெர்சியரன் மோலெக் உத்தாமாவில் இரண்டு கார்கள் வெள்ளத்தில் சிக்கியதாக மாலை 4.38 அளவில் தகவல் கிடைத்ததாக ஜோகூர் தீயணைப்பு, மீட்புத் துறை கூறியது.
சம்பவ இடத்திற்கு 13 தீயணைப்பாளர்களுடன் ஒரு தீயணையணைப்பு வாகனமும் ஓர் அவசர மருத்துவ மீட்புச் சேவை வாகனமும் அனுப்பப்பட்டன. கார் ஓட்டுநர்கள் இருவர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.