கோலாலம்பூர்: பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் தற்போதைய நிலையில் மிகவும் நிலையாக, வலுவாக, உள்ளதாக ஜனநாயக செயல் கட்சியின் தலைமைச் செயலாளர் திரு ஆண்டனி லோக் கூறியுள்ளார்
ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளின் புரிந்துணர்வும் கடப்பாடும் கூட்டரசு அரசின் நிலைத்தன்மைக்கு முக்கிய காரணம் என்று அவர் தெரிவித்தார்.
மலேசிய கூட்டரசு அரசாங்கம் ஆட்சி அமைத்து கடந்த நவம்பர் 24ஆம் தேதி ஓராண்டை கொண்டாடிய நிலையில் திரு லோக் மேற்கண்டவாறு கூறினார்.
மலேசிய போக்குவரத்து அமைச்சராகவும் உள்ள திரு லோக், உண்மை நிலை இவ்வாறு இருக்க சில கட்சிகள் ஒற்றுமை அரசு கவிழும் என்றும் அரசாங்கம் மாறும் என்றும் கூறிவருவதாக தெரிவித்தார்.
“எதிர்த்தரப்பினர் அரசாங்கத்துக்கு இடையூறு விளைவித்து இந்த அரசு கவிழும் என்றும் புதிய பிரதமர் பொறுப்பேற்பார் என்று கூறியபோதும் உண்மை நிலை என்னவெனில் அரசாங்கம் வலுவாக உள்ளது. இதில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க கடப்பாடு கொண்டுள்ளன,” என்று திரு லோக் விளக்கினார்.