புத்ரா ஜெயா: மலேசியாவில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இருப்பினும், முடக்கநிலைக் கட்டுப்பாடுகள் விதிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி அகமது டிசம்பர் 18ஆம் தேதியன்று அறிவித்தார்.
மலேசியாவில் மளமளவென அதிகரித்து வரும் கொவிட்-19 பாதிப்பால் கவலை எழுந்துள்ளது.
கொவிட்-19 பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது நடைமுறைப்படுத்தபட்ட கட்டுப்பாடுகளை விதிக்காமல் இம்முறை நிலைமையை மலேசியாவால் சமாளிக்க முடியும் என்று டாக்டர் ஸுல்கிஃப்லி நம்பிக்கை தெரிவித்தார்.
டிசம்பர் 10ஆம் தேதிக்கும் 16ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மலேசியாவில் 20,696 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டதாக தி ஸ்டார் நாளிதழ் தெரிவித்தது.
டிசம்பர் 3ஆம் தேதிக்கும் 9ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மலேசியாவில் 12,757 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. 11 பேர் மாண்டனர்.
அண்மைய கிருமித்தொற்று அதிகரிப்பை எதிர்கொள்ள சுகாதார அமைச்சு ஐந்து முனை உத்தியைத் தயாரித்துள்ளதாக அமைச்சர் ஸுல்கிஃப்லி கூறினார்.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரை முன்கூட்டியே அடையாளம் காணும் தளங்களும் அவற்றில் அடங்கும்.