சிட்னி: ஜஸ்பர் சூறாவளியைத் தொடர்ந்து பெய்த கனமழையில் ஆஸ்திரேலியாவின் பல சுற்றுலா நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
வடகிழக்கில் கிரேட் பேரியர் ரீஃப் வழியாக உள்ள பல நகரங்கள் துண்டிக்கப்பட்டன. சில குடியிருப்பாளர்கள், ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்ததால் தப்பியோடி வீட்டின் கூரைகளில் தஞ்சமடைந்தனர்.
கடந்த வாரம் குவீன்ஸ்லாந்து மாநிலத்தை ஜஸ்பர் சூறாவளித் தாக்கியது. அது வலுவிழந்தபோது வாரயிறுதியில் விடாமல் தொடர்ந்து கனமழை பெய்தது என்று அதிகாரபூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
“ஏராளமான இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்துள்ளோம். ஆனால் இது ரொம்ப மோசம். எனது நினைவில் இதுபோன்ற மோசமான இயற்கைப் பேரிடரை பார்த்ததில்லை,” என்று ஏபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குவீன்ஸ்லாந்து மாநில முதல்வர் ஸ்டீவன் மைல்ஸ் தெரிவித்தார்.
“மழை தொடர்ந்து பெய்வதே தற்போதைய பிரச்சினை. அது குறையும் வரை வான்வழி உதவிகள் எதுவும் வழங்க முடியாது,” என்றார் அவர்.
கிரேட் பேரியர் ரீஃபுக்கு வாயிலாக இருக்கும் கெர்ன்ஸில் 150,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அங்கு 600 மில்லி மீட்டருக்கு (24 அங்குலம்) மழை பெய்தது. திங்கட்கிழமை அதிகாலை வரை சுமார் 40 மணி நேரம் மழை பெய்தது. இது, டிசம்பர் மாத சராசரி மழையைவிட மூன்று மடங்கு அதிகம்.
இதற்கிடையே கெர்ன்ஸ் விமான நிலையத்தில் திங்களன்று அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன அல்லது ஒத்தி வைக்கப்பட்டன.
விமான நிலையத்தில் உள்ள சில விமானங்கள் பாதியளவு தண்ணீரில் மூழ்கியிருப்பதை சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட படங்கள் காட்டுகின்றன.
ஞாயிற்றுக்கிழமையிலிருந்து நீர் வெளியேற்றும் பம்புகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கெர்ன்ஸுக்கு தெற்கே 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இங்காம் நகரில் ஒரு முதலை கால்வாயில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கெர்ன்ஸ் விமான நிலையத்துக்கு தெற்கேயுள்ள குடியிருப்பாளரான டான், சமையல் அறை பலகை மீது ஏறி நான்கு மணி நேரம் தண்ணீர் வடிவதற்காகக் காத்திருந்தார். பின்னர் அவர் மற்றொரு வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த வீட்டின் கூரையில் சுமார் 30 பேர் படகுக்காகக் காத்திருந்தனர்.