சோல்: வடகொரியா டிசம்பர் 18ஆம் தேதி நீண்டதூர ஏவுகணையைப் பாய்ச்சியதாக தென்கொரிய ராணுவம் கூறியது.
மேலும், 12 மணி நேரத்திற்குள் வடகொரியா அதன் இரண்டாவது ஏவுகணயைப் பாய்ச்சியது என்றும் ராணுவம் குறிப்பிட்டது.
அந்த ஏவுகணை 15,000 கிலோ மீட்டர் தூரம் செல்லும் ஆற்றலைப் பெற்றது என ஜப்பானியப் பாதுகாப்புத் துணை அமைச்சர் ஷிங்கோ மியாகே கூறியுள்ளார்.
டிசம்பர் 18ஆம் தேதி, வடகொரியத் தலைநகர் பியோங்யாங்கிற்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் இருந்து வடகிழக்குக் கடற்கரையிலிருந்து கடலை நோக்கி ஏவுகணை ஏவப்பட்டு சுமார் 1,000 கிலோ மீட்டர் தூரம் சென்றதாக தென்கொரியக் கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்தனர்.
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைப் பாய்ச்சியதாக ஜப்பானியப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.
ஏவுகணை ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஹொக்கைடோவுக்கு மேற்கில் உள்ள கடலில் விழுந்ததாக ஜப்பானியக் கடலோரக் காவல்படை கூறியது.
வடகொரிய ராணுவ அச்சுறுத்தலைத் தடுக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதைக் குறித்து வாஷிங்டனும் சோலும் உயர்நிலை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தின.
எந்தவோர் அணுவாயுதத் தாக்குதலும் ஆட்சி முடிவுக்கு வழிவகுக்கும் என்று அக்கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டது.