பேங்காக்: தாய்லாந்தின் சியாங் ராய் வட்டாரத்தில் அமைந்துள்ள தாம் லுவாங் குகையின் இரண்டு நிலவறைகள் (எண் 2,3) சுற்றுப்பயணிகளுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளன.
சாகசங்களில் ஈடுபாடுடைய சுற்றுப்பயணிகள் அந்த நிலவறைகளுக்குச் செல்ல முன்பதிவு செய்துகொள்ளலாம். இருப்பினும் அவர்களின் எண்ணிக்கை வரையறைக்குட்பட்டதாக இருக்கும்.
2018ஆம் ஆண்டு ‘வைல்ட் போர்ஸ்’ எனும் காற்பந்துக் குழுவின் உறுப்பினர்களான சிறுவர்கள் 12 பேரும் அவர்களின் பயிற்றுவிப்பாளரும் அந்தக் குகையில் சிக்கிக்கொண்டனர். கிட்டத்தட்ட 17 நாள்களுக்குப் பிறகு 2018 ஜூன் மாதம் அவர்கள் அனைவரும் வெற்றிகரமாக உயிருடன் மீட்கப்பட்டனர்.
குகையைச் சுற்றிப் பார்ப்பதற்கான முன்பதிவு டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக, செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் காலை, பிற்பகல் நேரங்களில் ஒரு நாளைக்கு இரண்டு சுற்றுப்பயணங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
தகுதிபெறும் சுற்றுப்பயணிகள், 700 மீட்டர் ஆழமான பாதையில் இரண்டு முதல் நான்கு மணி நேரம் குகையைச் சுற்றிப் பார்க்கலாம். ‘ஸ்டாலக்டைட்’ எனப்படும் சுண்ணாம்புப் படிவுகள், பாறைகள், துளைகள் போன்றவை அந்தப் பாதையெங்கும் காணப்படும்.
தாம் லுவாங் குகையைச் சுற்றிப்பார்க்கக் கட்டணமாக தாய்லாந்துச் சுற்றுப்பயணிகள் 950 பாட் ($36) செலுத்தவேண்டும். வெளிநாட்டினருக்குக் கட்டணம் 1,500 பாட் ($57). பொருள்கள், விபத்து தொடர்பான காப்பீட்டுக் கட்டணம் இதில் சேராது.
குறைந்தது 15 நாள்கள் முன்பாக முன்பதிவு செய்வது கட்டாயம். தேசியப் பூங்கா, வானிலை நிலவரத்தை மதிப்பீடு செய்து அதற்கேற்ப சுற்றுப்பயணம் செல்ல இயலுமா என்பது குறித்து விண்ணப்பதாரர்களுக்குத் தகவல் தரும்.
வருகையாளர்கள் அடையாள அட்டையுடன் முன்பதிவு செய்ததற்கான ஆதாரத்தையும் காட்டவேண்டும். முன்பதிவு செய்யாதவர்கள் குகையின் நிலவறைகள் 2, 3 ஆகியவற்றுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
2018ல் மீட்புப் பணியாளர்கள் பயன்படுத்திய நிலவறை 1க்கு அனுமதி இலவசம். அது 200 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது.