நியூயார்க்: மியன்மாரில் மூவரில் ஒருவருக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.
மூவரில் ஒருவர் என்பது மியன்மார் மக்கள்தொகையில் 18 மில்லியன் பேர் ஆகும். 2024 ஆம் ஆண்டு இந்த நெருக்கடியைச் சமாளிக்க பில்லியன் கணக்கான டாலர் பண உதவி தேவைப்படுவதாகவும் ஐக்கிய நாட்டு நிறுவனம் திங்கட்கிழமை தெரிவித்தது.
தென்கிழக்காசிய நாடான மியன்மாரில் கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆட்சி கவிழ்ப்பு நடந்தது. அதன் பின்னர் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனால் அந்நாட்டில் பெரும் நெருக்கடி எழுந்தது
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளான நிலையில் மியன்மார் பொதுமக்களின் வாழ்வாதாரம், பொருளியல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பயத்துடன் வாழ்த்து வருவதாகவும் ஐக்கிய நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2020 ஆம் ஆண்டு மியன்மாரில் 1 மில்லியன் மக்களுக்குத் தான் மனிதாபிமான உதவிகள் தேவைப்பட்டது. 2022ஆம் ஆண்டு அது 17 மில்லியனாக இருந்தது. தற்போது அது 18.6 மில்லியனாக உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாட்டு தகவல்கள் கூறுகின்றன.
“இந்த நெருக்கடியில் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான், தற்போது 6 மில்லியனுக்கு மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இடமாற்றம், உடல்நலக் கோளாறு, கல்வி, உணவு கிடைக்காமல் இருப்பது, பாதுகாப்பின்மை, கட்டாயப்படுத்தி வேலையில் சேர்ப்பது, மனநல பாதிப்பு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று அதிகாரிகள் கவலைத் தெரிவித்தனர்.
மக்கள் பெரிய அளவில் இடம் மாற்றப்படுவது குறித்து ஐக்கிய நிறுவனம் அக்கறைத் தெரிவித்துள்ளது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 2.6 மில்லியன் பேர் அவர்களது சொந்த இடங்களைவிட்டு வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். சென்ற ஆண்டு அது 1.1 மில்லியனாக இருந்தது.
நாட்டின் மேற்குப்பகுதிகளில் மியன்மார் ராணுவத்திற்கும், புரட்சியாளர்களுக்கும் இடையே சண்டைகள் தீவிரமாக நடப்பதால் அங்கிருந்து அதிக அளவில் மக்கள் வெளியேறிவருகின்றனர்.
2024ஆம் ஆண்டு சண்டைகள், கலவரங்கள் போன்றவை அதிக அளவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் மியன்மாரில் நிலைமை மோசமாகக்கூடும் என்று நம்பப்படுகிறது.
உடனடியாக உதவி வழங்க வேண்டும் என்ற பட்டியலில் 5.3 மில்லியன் மக்கள் உள்ளனர். அவர்களுக்கு மட்டும் 1.3 பில்லியன் வெள்ளி தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மியன்மாரில் நிலவும் நெருக்கடியில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் சிக்கித் தவிப்பதாகவும் அவர்கள் கூறினர்.