கியவ்: ரஷ்யாவின் ‘சு-34’ ரக மூன்று போர் விமானங்களை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்திவிட்டதாக உக்ரேனிய ராணுவம் பெருமிதத்துடன் கூறியுள்ளது.
ரஷ்யாவுக்கு எதிராக 22 மாதங்களாக நீடிக்கும் போரில் இது, உக்ரேனுக்கு முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
உக்ரேனின் கொக்கரிப்புக்கு ரஷ்யா பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் ரஷ்ய வலைப் பதிவாளர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஒப்புக் கொண்டனர்.
ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கு அமெரிக்கா கொடுத்துள்ள ஏவுகணை தற்காப்பு சாதனங்களை உக்ரேன் பயன்படுத்தியிருக்கலாம் என்று பகுப்பாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உக்ரேனின் அறிக்கையை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை.
“இன்று மதியம் தெற்கு வட்டாரத்தில் ரஷ்யாவின் மூன்று ‘சு-34’ குண்டு வீசும் விமானங்களை குறைத்துவிட்டோம்,” என்று டெலிகிராம் தகவல் தளத்தில் உக்ரேனிய விமானப் படையின் தளபதி மிகோலா ஒலெஷ்சுக் தெரிவித்துள்ளார்.
“புத்திசாலித்தனமான திட்டமிட்ட நடவடிக்கை,” என்று விமானப் படையின் பேச்சாளர் ஒருவர் தொலைக்காட்சி ஒளிபரப்பில் கூறியிருந்தார்.
“சில காலமாக எங்களுடைய புள்ளி விவரங்களில் ‘சு-34’ விமானங்களை காண முடியவில்லை” என்று அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே அதிபர் ஸெலன்ஸ்கி, இரவு நேர காணொளி உரையில் கெர்சன் வட்டாரத்தில் ரஷ்யப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஒடிசா வட்டார விமான எதிர்ப்பு பிரிவைப் பாராட்டியிருந்தார்.
மாஸ்கோவின் பிப்ரவரி 2022 படையெடுப்பின் முதல் நாள்களில் இப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டது. உக்ரேனியப் படைகள் இந்த வட்டாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கான முயற்சிகளை எடுத்தன. பின்னர் நவம்பரில் கெர்சனில் உள்ள டினிபுரோ ஆற்றின் கிழக்கு கரைகளில் தங்களுடைய நிலைகளை உக்ரேனியப் படைகள் வலுப்படுத்தின.
ரஷ்யாவை தளமாகக் கொண்ட யூரேசியா டெய்லி, உக்ரேனின் கூற்று நம்பத்தகுந்ததாக இருப்பதாகக் கூறியது.
டினிப்ரோ ஆற்றின் மேற்குப் பகுதியில் இருந்து உயரமான இலக்குகளுக்கு எதிராக 160 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் பேட்ரியாட் ஏவுகணைகளை கியவ் பயன்படுத்திருக்கலாம் என்று அது கூறியது.