பெர்லின்: புத்தாண்டுக்கு முன்தினம் தாக்குதல் நடத்தப்படுவதற்கான அறிகுறிகள் இருப்பதை அடுத்து கொலோன் தேவாலயத்தில் பாதுகாப்பைக் கடுமையாக்க உள்ளதாக டிசம்பர் 23ஆம் தேதியன்று ஜெர்மானியக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தீவிரவாத அமைப்புகளால் வன்முறை வெடிக்கும் மிரட்டல் அண்மைய வாரங்களாக அதிகரிப்பது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கமும் எச்சரிக்கைகள் விடுத்து வருகிறது.
இந்நிலையில், மாலையில் பிரார்த்தனைக் கூட்டம் முடிவுற்ற பிறகு தேவாலயத்தை மூடுவதற்கு முன் கண்காணிப்பு நாய்களைக் கொண்டு வளாகத்தில் சோதனை மேற்கொள்வர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
கிறிஸ்துமசுக்கு முதல் நாளன்று அனைத்து வருகையாளர்கள் மீதும் பாதுகாப்புச் சோதனை நடத்தப்படுவதுடன் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்துவிடவும் மக்களுக்குப் பரிந்துரைக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டது.
தற்போது இதன் தொடர்பில் புலன்விசாரணை நடந்துவருவதால் இதுகுறித்து கூடுதல் விவரம் தெரிவிக்க முடியாது என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்காலங்களில் இஸ்லாமியர் அமைப்பு ஒன்று, தாக்குதல் மேற்கொள்ள இருப்பதற்கான அறிகுறிகள் குறித்து ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரியவந்திருப்பதாக ‘பில்ட்’ ஜெர்மானிய செய்தி நிறுவனம் முன்னதாகச் செய்தி வெளியிட்டிருந்தது.
இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் ஜெர்மனியிலும் ஐரோப்பிய பகுதிகளிலும் இத்தகைய வன்முறை தொடர்பான மிரட்டல் அதிகரித்து வருவதாக உள்துறை அமைச்சர் நேன்சி ஃபேசரும் அண்மைய வாரங்களில் எச்சரித்திருந்தார்.
உச்சநிலை பாதுகாப்புக்கான தேவை கருதித் தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் சந்தைகளிலும் பாதுகாப்பை வலுவாக்குவதாக ஆஸ்திரியக் காவல்துறையினரும் அறிக்கை விடுத்தனர்.