காட்மாண்டு: இவ்வாண்டு ஜனவரி மாதம் நேப்பாளத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் அதிலிருந்த 72 பேரும் மரணமடைந்தனர்.
இந்த விபத்துக்கு காரணம் விமானி தவறான விசைக்கோலை இழுத்ததுதான் என்று கண்டறியப்பட்டுள்ளதாக விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் டிசம்பர் 28ஆம் தேதி தெரிவித்தனர்.
இதில் விமானி விமானம் செல்லும் திசையை மாற்ற விமான இறக்கைகளின் விசைக்கோலை இழுப்பதற்கு பதில் அதன் சுழல்விசிறியின் விசைக்கோலை இழுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த யெட்டி ஏர்லைன்ஸ் விமானம் முன்னோக்கிப் பயணம் செய்ய முடியாமல் கீழே விழுந்ததாக தெரியவந்துள்ளது என விசாரணை மேற்கொண்ட குழு நேப்பாள அரசிடம் விளக்கியுள்ளது.
ஏடிஆர் 72 ரக விமானமான அது இரண்டு சுழல்விசிறிகளைக் கொண்ட விமானம் என்று கூறப்படுகிறது. அந்த விமானம் காட்மாண்டுவில் இருந்து 68 பயணிகள், 4 சிப்பந்திகளுடன் இமயமலையில் உள்ள பொக்காரா என்ற சுற்றுப்பயணிகள் அதிகம் விரும்பிப் பார்க்கும் மலைநகரை நோக்கி சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகியது.
விமானம் கீழிறங்கும்போது, தரையிலிருந்து கிட்டத்தட்ட 220 மீட்டர் உயரத்தில், விமானிகளில் ஒருவர் தவறாக சுழல்விசிறிக்கு பக்கத்தில் இருக்கும் விசைக்கோலை இழுப்பதற்கு பதில் சுழல்விசிறியின் விசைக்கோலை இழுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.