சிட்னி: ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை அன்று வெப்ப அலையில் சிக்கித் தத்தளித்தன. ‘எல் நினோ’ வானிலைக் காரணமாக பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் வானிலை முன்னறிவிப்பு நிலையம் கூறியது.
மேற்கு ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் இரண்டாவது நாளாக வெப்ப அலை எச்சரிக்கைகள் நடைமுறையில் இருந்தன. மேலும், தெற்கு ஆஸ்திரேலியா வட்டாரங்களுக்கும் அவை நீட்டிக்கப்பட்டன.
அதே நேரத்தில் குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் ஆகிய பகுதிகளைத் தீவிர வெப்ப அலைத் தாக்கக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்குக் கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாக அது மேலும் தெரிவித்தது.
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மாநிலங்களான மேற்கு ஆஸ்திரேலியாவில் இருக்கும் பில்பரா மற்றும் கேஸ்கோய்ன் மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை அன்று வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என அந்நாட்டு வானிலை முன்னறிவிப்பு நிலையம் எச்சரித்தது.