வாஷிங்டன்: மத்திய கிழக்கு முழுவதும் ஏவுகணைத் தாக்குதல் நடந்துள்ளதால் காஸா போர் மற்ற வட்டாரங்களுக்கும் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
ஈராக், லெபனான், சிரியா, ஏமன் ஆகிய நாடுகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஈரானும் அதன் நட்பு நாடுகளும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக திரும்பியுள்ளன.
டமாஸ்கஸில் உள்ள ஒரு வீட்டை ஏவுகணை தாக்கியதில் புரட்சிப் படை வீரர்கள் ஐவர் கொல்லப்பட்டதாக ஈரான் கூறியது. இதற்கு இஸ்ரேல்தான் காரணம் என்று அது குற்றம் சாட்டியது.
லெபனானில் உள்ள பாதுகாப்புப் படையும் இஸ்ரேல் தாக்கியதில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் மூவர் உயிரிழந்ததாகத் தெரிவித்தது.
இந்த நிலையில் ஜனவரி 20ஆம் தேதி ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு போராளிகளால் ஏவப்பட்ட ஏவுகணைகள் அமெரிக்கப் படைகளை குறி வைத்து அல் ஆசத் விமானப் படைத் தளத்தை தாக்கியது என்று அமெரிக்க மத்திய தளபத்தியம் தெரிவித்தது.
பல அமெரிக்க வீரர்கள் அதிர்ச்சிகரமான மூளைக் காயங்களுக்காக வெளியேற்றப்பட்டனர் என்றும் ஈராக் சேவை உறுப்பினர் ஒருவர் காயமடைந்ததாகவும் அது கூறியது.
ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹூதி குழுவினரும் தங்களை குறிவைத்து செங்கடலைத் தாக்கியதாகவும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா மேலும் தெரிவித்தது.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து திடீர் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து காஸா வட்டாரத்தில் போர் வெடித்தது. இதில் 1,200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இருநூறுக்கும் மேற்பட்டவர்களை ஹமாஸ் பிணைப் பிடித்துச் சென்றது.
ஜனவரி 20ஆம் தேதி காஸா வட்டாரம் முழுவதையும் இஸ்ரேல் தாக்கியது. அதே சமயத்தில் இஸ்ரேலிய விமானங்கள், ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகளைக் கண்டறிய உதவுமாறு பாலஸ்தீனியர்களை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களை ரஃபாவின் தெற்குப் பகுதியில் வீசியது என குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
ஈரானிய எதிர்ப்பின் ஓர் அங்கமாக ஹமாஸ் செயல்பட்டு வருகிறது. இந்த வட்டார கூட்டணியில் லெபானின் ஹிஸ்புல்லா, அதிபர் பஷார் அல்-ஆசாத்தின் சிரியா அரசாங்கம், ஈராக்கில் உள்ள ஷியா போராளிக் குழுக்கள் ஏமனின் பெரும்பகுதிகளைக் கட்டுப்படுத்தும் ஹூதி படை ஆகியவை உள்ளடங்கியிருக்கின்றன.
அதிகரித்துள்ள வட்டாரப் பதற்றத்துக்கு இடையே ஈரானிய அதிபர் இப்ராகிம் ரைசி, சிரியாவில் நடத்திய தாக்குதலுக்காக இஸ்ரேல் தண்டிக்கப்படும் என்று சூளுரைத்துள்ளார்.
இஸ்ரேல் இதற்குப் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.