வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைப் பிரதிநிதிக்கும் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அதற்கான வாக்களிப்பில் போட்டியிட்டு வந்த ஃபுளோரிடா ஆளுநர் ரோன் டிசான்டிஸ் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
அதற்குப் பதிலாக முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்கு ஆதரவு அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில், அயோவா மாநிலத்தில் வாக்களிப்பு நடைபெற்றது. அதில் டிரம்ப் அபார வெற்றி பெற்றார். டிசான்டிஸ் இரண்டாவது இடத்தையும் நிக்கி ஹேலி மூன்றாவது இடத்தையும் விவேக் ராமசுவாமி நான்காவது இடத்தையும் பிடித்தனர்.
அந்த வாக்களிப்புக்குப் பிறகு திரு விவேக் ராமசுவாமி போட்டியிலிருந்து விலகி, டிரம்ப்பிற்கு ஆதரவு அளிக்கப்போவதாகத் தெரிவித்தார்.
தற்போது திரு டிசான்டிசும் அவ்வாறே செய்துள்ளார்.
எனவே, நிக்கி ஹேலி மட்டுமே டிரம்ப்பிற்குப் போட்டியாக இருப்பார் என்று கூறப்படுகிறது.
ஆனால், அயோவாவில் திருவாட்டி நிக்கிக்கு மிகக் குறைந்த வாக்குகள் கிடைத்தன.
“டிரம்ப்பிற்கு இன்னொரு வாய்ப்பு அளிக்க குடியரசுக் கட்சி ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் விரும்புகின்றனர் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது,” என்று திரு டிசான்டிஸ் கூறினார்.