வாஷிங்டன்: ஏடன் வளைகுடாவில் இருந்த ஈரானியக் கப்பலில் அதிரடிச் சோதனை நடத்திய இரண்டு அமெரிக்கக் கடற்படை வீரர்கள் காணாமல் போனதை அடுத்து, அவர்களைத் தேடும் பணியை அமெரிக்கக் கடற்படை முடுக்கிவிட்டது.
54,390 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான கடல்பரப்பில் அமெரிக்கா, ஸ்பெயின், ஜப்பான் ஆகியவை கூட்டாகத் தேடுதல் பணியை நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிரத் தேடுதல் பணிக்குப் பிறகும் அவர்கள் இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே, அவர்கள் இருவரும் மாண்டுவிட்டதாக அமெரிக்கக் கடற்படை ஜனவரி 21ஆம் தேதியன்று அறிவித்துள்ளது.
ஜனவரி 11ஆம் தேதியன்று சோமாலியாவின் கடலோரப் பகுதிக்கு அருகில் இருந்த ஈரானியக் கப்பலில் அந்த இரு வீரர்களும் அதிரடிச் சோதனை நடத்தியதாக அமெரிக்கக் கடற்படை தெரிவித்தது.
அந்த இரு வீரர்களின் மரணம் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர்களது தியாகங்கள் அளப்பரியது என்றும் அமெரிக்கக் கடற்படை கூறியது.