காஸா முனை: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதியன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. பல இஸ்ரேலியர்களை அது கடத்திச் சென்று பிணைக் கைதிகளாக வைத்திருக்கிறது.
அந்தத் தாக்குதல் காரணமாக இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே மிகக் கடுமையான போர் நடந்து வருகிறது.
போரின் காரணமாக இதுவரை 25,000க்கும் மேற்பட்டோர் மடிந்துவிட்டதாகப் பாலஸ்தீன சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அக்டோபர் 7ஆம் தேதியன்று இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை ஹமாஸ் தற்காத்துப் பேசியுள்ளது.
பாலஸ்தீனர்களின் நிலப்பகுதிகளை இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும் அவர்களை அங்கிருந்து விரட்டியடிக்க அந்தத் தாக்குதல் அவசியமாக இருந்ததாகவும் அது கூறியது.
அத்துடன் இஸ்ரேல் பிடித்து வைத்திருக்கும் பாலஸ்தீனர்களின் விடுதலைக்காகவும் தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அதன் 16 பக்க அறிக்கையில் தெரிவித்தது.
இருப்பினும், தாக்குதலின்போது சில தவறுகள் நிகழ்ந்ததாக ஹமாஸ் ஒப்புக்கொண்டது. இதற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் ராணுவக் கட்டமைப்பு மிக விரைவாக முறியடிக்கப்பட்டதும் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட குழப்பங்களும் முக்கிய காரணம் என்று அது குறிப்பிட்டது.
அக்டோபர் 7ஆம் தேதியன்று காஸாவில் இஸ்ரேலிய ராணுவத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் போராளிகள், சாலைகளில், வெளிப்புற நிகழ்வு, வீடுகளில் இருந்த இஸ்ரேலியர்களையும் வெளிநாட்டவர்களையும் தாக்கினர்.
இதில் ஏறத்தாழ 1,140 பேர் மாண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிட்டத்தட்ட 250 பேரை ஹமாஸ் போராளிகள் பிணைபிடித்தனர். அவர்களில் 132 பேர் காஸாவில் இருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.