பேங்காக்: தாய்லாந்தின் ‘மூவ் ஃபார்வர்ட்’ கட்சியைக் கலைக்கக் கோரி பிப்ரவரி 1ஆம் தேதியன்று வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார்.
தாய்லாந்து மன்னரை விமர்சிக்கக்கூடாது என்று நடப்பில் இருக்கும் சட்டத்தைத் திருத்த ‘மூவ் ஃபார்வர்ட்’ திட்டமிட்டுள்ளதால் அக்கட்சிக்கு எதிராக அந்த வழக்கறிஞர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தாய்லாந்தில் சீர்திருத்தங்களைக் கொண்டு வரப்போவதாகப் பிரசாரம் செய்து தேர்தலில் வெற்றி பெற்ற ‘மூவ் ஃபார்வர்ட்’ கட்சிக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து மன்னரை ‘மூவ் ஃபார்வர்ட்’ கட்சி மதிக்கவில்லை என்றும் தேசிய பாதுகாப்புக்கு அது முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும் தாய்லாந்து நீதிமன்றம் ஜனவரி 31ஆம் தேதி தீர்ப்பளித்தது.
மன்னர் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கக்கூடாது என்று நடப்பில் உள்ள சட்டத்தை மாற்ற அக்கட்சி எடுக்கும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
தாய்லாந்து அரச குடும்பத்தை அவமதிக்கும் வகையில் கருத்துகளைத் தெரிவிப்போருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
‘மூவ் ஃபார்வர்ட்’ கட்சிக்கு எதிராக வழக்கறிஞரும் முன்னாள் செனட்டருமான திரு ருவாங்கிராய் லீகிட்வட்டானா வழக்கு தொடுத்துள்ளார்.
இதற்கு முன்பு அவர் பல உயர் அரசு அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் தடை செய்யுமாறு பலமுறை வழக்குகள் தொடுத்து வெற்றி கண்டவர்.
அவர் தொடுத்த வழக்கின் பேரில் 2008ஆம் ஆண்டில் அப்போதைய தாய்லாந்துப் பிரதமர் பதவி இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.