சாபா: மலேசியாவைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் சாபாவில் இருக்கும் தனது கிராமத்திற்கு அருகிலுள்ள பிரதான சாலையில் இருந்த குழி பற்றி மற்ற வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அக்குழியில் வாழைக் கன்று ஒன்றை நட்டு வைத்தார்.
மலேசியாவைச் சேர்ந்த அந்த ஆடவரின் பெயர் மகாதீர் அரிஃபின்.
இது குறித்து ஜனவரி 29ஆம் தேதி ஃபேஸ்புக் பதிவு ஒன்றை அவர் பதிவிட்டார்.
அதில், சாலையில் இருக்கும் குழியில் வாழைக் கன்று ஒன்று நேராக நிற்பதைப் போன்ற புகைப்படம் ஒன்றைக் காண முடிந்தது.
மேலும் அப்பதிவில், “சாலை பயனர்களுக்காக நான் வருந்துகிறேன். அடுத்த முறை தார் பூசி சாலையை மூடுகிறேன்,” எனத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்ட சிறிது நேரத்தில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் அவ்விடத்திற்கு விரைந்து வந்து அச்சாலையில் இருந்த குழியைத் தார் பூசி அடைத்தனர் (வலது படம்).
அதை சாபா மாநிலப் பொதுபணித்துறையும் உறுதி செய்தது. மேலும், சாலையைச் சரிசெய்ய முடியாமல் போனதற்கு தொடர்ச்சியான மழையே காரணம் என அத்துறை மேலும் குறிப்பிட்டது.